சென்னை: 2020-21ம் ஆண்டிற்கான மின்வாரியத்தில் நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து செய்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், களஉதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப கடந்த 2020-21ம் ஆண்டுகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து மின்வாரியம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு தெரிவித்த கல்வி தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு கணினி மூலம் தேர்வு நடத்த மின்சார வாரியம் திட்டமிட்டு இருந்தது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இச்சட்டமும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மின்வாரியம் முன்னதாக பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.