×

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: பருவத்தில் வரும் பரு

அழகுப் பெட்டகம் 13

‘முகம் பார்த்து பேசு’ என்பார்கள். யாராக இருந்தாலும் சட்டெனப் பார்ப்பது முகம்தான். அகத்தின் அழகைக் காட்டும் முகம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.
முகம் பளிச்சென இல்லாமல், பருக்களோடு இருந்தால், தாழ்வு மனப்பான்மை தானாய் ஒட்டிக் கொள்ளும். அதுவும் வளர் இளம் பருவத்தினர் என்றால் கேட்கவே வேண்டாம். கவனம் முகத்தில் உள்ள பருவைச் சுற்றியே நகரும். யார் எதைச் சொன்னாலும் உடனே அதை செய்ய முயற்சிப்பதோடு, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பருவை போக்கும் முயற்சிகளில் தானாகவே இறங்கிவிடுவார்கள்.

30 வயதைத் தாண்டியவர்களுக்கும் முகப்பரு பிரச்சனை உண்டு. பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை. கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம். பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வரும்? இதையெல்லாம் நாம் யோசிப்பதில்லை. அறியவும் முயற்சிப்பதில்லை. பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு, முறையான வழிமுறைகளை துவக்கத்திலே செய்யத் தொடங்கினால் இப்பிரச்சனையில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

பரு வருவதற்கான காரணங்கள்

பருவ வயதினருக்கு “ஆன்ட்ரோஜன்” இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்குமே சுரக்கும். ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாய் சுரந்தால் முகப்பரு உண்டாகும். சருமத்தில் இருக்கும் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) “சீபம்” (Sebum) என்ற எண்ணெய்பசையினை சருமத் துளை வழியே வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதினருக்கு சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணெய்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கும். அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதீத அளவில் படிவதுடன், மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொண்டு, மயிர்கால்களின் துளைகளை அடைத்துவிடுகின்றன. விளைவு சருமம் சுவாசிக்க முடியாத நிலை அடைகிறது.

தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கி குறிப்பிட்ட இடத்தில் சேரத் துவங்கும். இப்படிச் சேரச்சேர தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுவே பரு (Acne vulgaris). சீபம் சுரப்பது அதிகரிக்கும்போது எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால், சீபம் வெளியேறும் வழி சுருங்கி, பரு வருவதற்குப் பாதை போடும். துவக்கத்தில் கருப்புநிற குருணை (Blackhead) வடிவில் தோன்றும் பரு, இரண்டு மூன்று நாள் இடைவெளியில் வெள்ளை நிறத்தில் (Whitehead) வெளிவரும். தோலில் இயற்கையாக இருக்கிற பாக்டீரியாக்கள் அதில் தொற்றிக்கொண்டு, பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். பருக்களை அடிக்கடி தொட்டுப்பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால், பருக்கள் மேலும் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் துவங்கும்.

இவற்றுக்கு முறையான சிகிச்சை பெறவில்லை என்றால், கட்டிகளாக (Cystic acne) மாறத் துவங்குவதுடன், தோற்றப் பொலிவையும் கெடுக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் அந்த நேரத்தில் மட்டும் முகப்பரு தோன்றும். 13 வயதில் தொடங்கி 85 சதவிகிதம் பேருக்கு 35 வயதுவரை நீடிக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்சனை தொடர்ந்து நீடிக்கலாம். பெற்றோருக்கு இருந்தால், வாரிசுகளுக்கும் வருவதற்கு வாய்ப்புண்டு. பரு நீங்கினாலும், சிலருக்கு பரு நீங்கியதற்கான கரும்புள்ளி ஆங்காங்கே இருக்கும். இல்லையெனில் அந்த இடம் பள்ளமாய் இருக்கும். துவக்கத்திலேயே இதை சரிசெய்யவில்லை எனில், நிரந்தர அடையாளத்தை முகம் பெற்றுவிடும்.

பருவில் நான்கு வகை உண்டு

* இயல்பாக வந்து போவது

* திரவமாக சிறிதாக வருவது

* சீலுடன் வருவது

* பெரிய பெரிய கட்டியாக வருவது இதில் முதல் மூன்றும் இயல்பாக அனைவருக்கும் வருவது. நான்காவது கொஞ்சம் ஆபத்தான வகையினைச் சேர்ந்தது. இந்தவகை பருவை சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும்.

யாருக்கெல்லாம் வரும்

* எண்ணெய்த் தன்மையுடைய சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும்.

* மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வரலாம்.

* மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், டேன்ட்ரஃப் பிரச்னை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு உள்ளது.

* சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும்.

* அழகு சாதனப் பொருட்கள், ஃபேஷ்வாஸ் போன்றவற்றை அடிக்கடி மாற்றம் செய்வதாலும், முகத்தில் எந்நேரமும் மேக்கப்புடன் இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும். சருமம் இயல்பாய் சுவாசிக்க சற்று இடைவெளி தர வேண்டும்.

பரு வந்தால் செய்யக் கூடாதவை

* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

* பருவை விரலால் அழுத்தினால், நோய் தொற்றாகி அந்த இடம் பள்ளமாகி, பிறகு அதுவே நிரந்தரமாகும்.

* முகத்தில் பரு உள்ளவர்கள் சிட்ரஸ் ஆசிட் அதிகம் உள்ள லெமன், தக்காளி, ஆரஞ்சு பழங்களை முகத்தில் பேஸ் பேக் போடக் கூடாது.

பருவந்தால் கடைபிடிக்க வேண்டியவை

* அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.

* தினம் நான்கு அல்லது ஐந்து முறை சாதாரண தண்ணீரில் முகம் கழுவுதல் வேண்டும்.

* காலை மாலை நேரம் ரோஸ் வாட்டரில் முகம் கழுவ உடல் சூடு குறையும்.

* இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தைக் கழுவி சுத்தம் செய்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.

* எண்ணெய்யில் தயாரான உணவுகளை தவிர்த்தல் நல்லது.

* பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.

* ஜெல் அடிப்படையில் தயாரான ஃபேஸ் வாஸ்களை பயன்படுத்தலாம்.

* வெயிலில் முகத்தை தாக்காதவாறு, முகத்தை மூடி பாதுகாப்பாக வெளியே செல்ல வேண்டும்.

* சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க சன் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

* கைபேசிகளில் வெளியேறும் கதிர் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதும், தூங்கும்போது அருகாமையில் வைப்பதை தவிர்ப்பதும் நல்லது.

* சாலிட்டிரிக் ஆயீல் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஸ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

* ஆலுவேரா சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆலுவேரா ஜெல்லுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.

* வேப்பிலை, மஞ்சள், வெந்தயம் சேர்த்து அரைத்து முகத்தில் மாஸ்க் போடலாம்.

* பழம் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உணவாக எடுக்க வேண்டும். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து தயாராகி வரும் ஃபேஸ் க்ரீம்கள் அந்த நாட்டவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தயாரானது. அவை டைப் 1, 2, 3 என்ற காம்ளெக்ஷனில் இருக்கும். நம் நாட்டின் ஸ்கின் டைப் 4, 5 வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் நமது நாட்டில் தயாரான ஃபேஸ் க்ரீம்களே நம் சருமத்திற்கு
எப்போதும் சிறந்தது.

அடுத்த வாரம்...

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகப்பருவை நீக்கும் முறை...

(ஒப்பனைகள் தொடரும்)

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!