சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அதையும் மீறி பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜராகி, ‘சுருக்கு மடிப்பு வலை தொடர்பான பிரதான வழக்கின் உத்தரவு வெளியாக தாமதமாகும் என்பதால், இடைக்காலமாக மூன்று மாதத்திற்கு மட்டும் இரட்டை மடிப்பு வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் சுமார் 60 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும். எனவே சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த தடைக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதனை நிராகரித்த நீதிபதிகள், ‘இதன் பிரதான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாங்கள் தலையிட்டு இடைக்காலமாக எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதனால் விடுமுறைக் காலம் முடிந்த பின்னர் மேற்கண்ட அமர்வின் முன் ஆஜராகி உங்களது கோரிக்கையை வைக்கலாம்,’ என தெரிவித்தனர்.

Related Stories: