கொட நாடு வழக்கை வேகமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை வெளிப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீர் கோரிக்கை

சென்னை: கொட நாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொடநாடு பங்களாவில் சம்பவம் நடந்த  ஆண்டில், அதிமுக ஆட்சியில் இருந்தது. மூன்று  ஆண்டில் தீர்ப்பு வரும் என்று காத்திருந்ேதன். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக இருந்ேதன். என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது  சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை. பத்திரிகையாளரும் இல்லை. சாதாரண மக்களில் ஒருவன்.

ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது ஜெயலலிதா வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது. இதற்கு நியாயம்  கேட்க எங்கள் ஜெயலலிதாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சியை மேலும் களங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அதிமுக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன் என்றார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: