தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு

திண்டிவனம்: தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்னை தீவிரமைடந்துள்ள நிலையில் சசிகலாவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சசிகலா இன்று மதியம் 2 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் மன்னார்சாமி கோயிலுக்கு அருகிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

திண்டிவனத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அப்போது பேசிய அவர்; பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காலியிடங்களில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? எதற்கும் மயங்காத தன்னலமற்ற தொண்டர்களை கொண்டது அதிமுக. வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து அதிமுகவை காக்கவே பொறுமையாக உள்ளேன்.

அதிமுக சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுங்கு அதிகாரம் தந்தது? எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. அனைவரும் ஒன்றிணைவதே புரட்சித்தலைவர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு நாம் காட்டும் நன்றியாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம்; அதன் நிலையை தற்போது பார்க்கும் போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. தொண்டர்கள் முடங்கினால் கட்சியும் முடங்கிவிடும் என எம்ஜிஆர் சொன்னதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

எம்ஜிஆர் மறைந்த போது திசை தெரியாத கப்பலாக இருந்த இயக்கத்தை கலங்கரை விளக்கமாக இருந்து கரை சேர்த்தவர் ஜெயலலிதா. தன்னிகர் இல்லா பெரியக்கமாக விளங்கிய நம் இயக்கம் தற்போது அராஜகர்களிடம் சிக்கித் தவிக்கிறது. என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; திண்டிவனத்தோடு மானூர், ஜக்காம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை இணைத்து நகராட்சியாக மாற்றிட வேண்டும். திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டத்தை சலவாதி, மானூர் உள்ளிட்டா கிராமங்களில் அரசு செயல்படுத்திட வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: