இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழ காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க கடந்த 1ம் தேதி சென்றனர். 2 தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் 12 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். இத்தகவல் அறிந்ததும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்க கோரி புதுச்சேரி அரசுக்கு கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், காரைக்கால் கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் என்பவருக்கு ெசாந்தமான படகில் சென்று கடந்த 3ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, காரைக்கால் கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த இளையராஜா (33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்மசாமி (48), மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்குடியை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28),

தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (37), ஜெகதீஸ்வரன் (27), விக்னேஷ் (22), சந்திஸ்குமார் (23), நாயகர்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் (23) ஆகிய 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிப்பது குறித்து இலங்கை அரசுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: