அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை சாலை அகலப்படுத்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. மேலும் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்ல இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களான உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட  ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்பவர்களும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்பவர்களும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையானது நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன  அதிகரிப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போக்குவரத்திற்கு மிகவும் கடினமாக உள்ளது.

சாலையின் அகலம் குறைந்து காணப்படுவதும், அதிக அளவிலான ஆக்ரமிப்புகளுமே இதற்கு காரணமாகும். மேலும் சாலை ஓரங்களில் உள்ள வடிகால்கள் செடி, கொடி, மணல் திட்டுக்களாலும் மூடிக்கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் வெள்ளம் செல்ல இடமின்றி சாலையில் வெள்ளம்  தேங்குகிறது. சாலையில் கனரக வாகனங்கள் அதிகப்படியாக பயணிப்பதால் பல இடங்களில் குண்டும் குழியுமாகவும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது.  

மயிலாடியை அடுத்த புன்னார்குளம் அருகில் அமைந்துள்ள கூண்டு பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்படுகின்றது. எனவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையை பொதுமக்கள் நலன் கருதி அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: