தஞ்சை அருகே பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்: 2 பேர் கைது..!!

தஞ்சை: தஞ்சாவூர்- சென்னை நெடுஞ்சாலையில் ராம்நகர் பாலம் அருகே சிலை கொள்ளையர்கள் இருவரை கைது செய்த சிலைதடுப்புப் பிரிவு போலீசார், நாகலிங்க உலோக சிலை, உலோக அம்மன் சிலையை பறிமுதல் செய்தனர். சென்னை சிலைதடுப்புப் பிரிவு போலீசார் சிலைகடத்தலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், சிலைதடுப்புப் பிரிவு டிஜிபி ஜேம்ஸ் முரளி மற்றும் தடுப்புபிரிவு தினகரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சிலைகள் எங்கெல்லாம் கடத்தப்படுகிறது, அவற்றை தடுக்கும் முறை என்ன என்பது பற்றி கூட்டம் நடைபெற்றது. இதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஆங்காங்கே அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர்- சென்னை நெடுஞ்சாலையில் இன்று 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்குவந்த நபர்கள், போலீசை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைக்கண்ட போலீசார், உடனடியாக அவர்களை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களின் முகவரியை கேட்டறிந்த போது, குருசேவ், பவுன்ராஜ் என தெரியவந்தது. அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணையை காவலர்கள் மேற்கொண்ட நிலையில், தஞ்சாவூர்- சென்னை நெடுஞ்சாலையில், யாரும் சந்தேகிக்காத வகையில்,சாலையின் ஓரத்தில், வெள்ளைநிற துணியில் சுற்றி சிலைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தகவலின் அடிப்படையில் அங்குசென்ற போலீசார், ஆய்வினை மேற்கொண்டபோது, அதில் 23 கிலோ எடை கொண்ட நாக சிலை, அம்மன் சிலை மற்றும் உலோகம் சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் எவ்வித ஆவணமும் இல்லாததால், உலோக சிலைகள் நிச்சயம் திருடப்பட்டிருக்கும் என்பதை கண்டறிந்து, அவர்களை சென்னை சிலைதடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சிலை திருடப்பட்டது உறுதியானதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 2 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட சிலையானது எந்தக்கோவிலில் இருந்து கடத்தப்பட்டது? இதன் தன்மை என்ன? என்பது குறித்து, இந்திய தொல்லியல்துறை ஆய்வுக்குட்படுத்தி, அதன் தொன்மை அறிந்து, சிலைகள் மீண்டும் அந்த கோவிலுக்கு அனுப்பப்படும் என்றும், மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் தெரிவித்துள்ளனர்.                       

Related Stories: