சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாப சாவு; 3 மாணவர்கள் படுகாயம்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி பகுதியில் சாலையை கடந்தபோது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரகாந்த்(20). இவர் தனது நண்பர்களான ஆந்திராவை சேர்ந்த சிவக்குமார், சசிகுமார் மற்றும் ரோஹித் ஆகியோருடன் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்க படித்து வந்தார்.

இவர்கள் அனைவரும் நேற்றிரவு ராஜீவ் காந்தி சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இந்த விபத்தில், சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மூன்று மாணவர்களை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று சந்திரகாந்த் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரியை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: