காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் உயிரிழந்தனர். 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், கலைஞர்நகர், முருகன் கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ராஜம்மாளின் மகன் குமாரும் உயிரிழந்துள்ளார்.  வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிநீருக்காக பாலாற்றில் ஆழ்துளை அமைக்கப்பட்டுள்ளது. அதிக ஆழத்தில் ஆழ்துளை அமைக்காமல் குறைந்த அளவில் போர் போடப்பட்டதால், தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்ததால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும்  காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். வாந்தி, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு அகற்றப்பட்டு புதிய இடத்தில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அருகில் பாலாறு இருந்தும் அதன் தண்ணீரை குடிக்க முடியவில்லை. பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காலரா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். வாந்தி, வயிற்றுப்போக்கால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,“மருத்துவ முகாம் அமைத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் சிகிச்சை அளித்து வருகிறோம்.

மூதாட்டி ராஜம்மாள் வயது முதிர்வு காரணமாகவும், அவரது மகன் குமாருக்கு பக்கவாதம் மற்றும் மூளையில் பிரச்னை இருந்ததாலும் இறந்துள்ளனர். குடிநீரில் பிரச்னை இருந்ததாக தெரியவில்லை” என்றனர்.  இந்த சம்பவம்  காஞ்சிபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: