பாஜவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக காணாமல் போய்விடும்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

அருப்புக்கோட்டை: பாஜவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக காணாமல் ேபாய் விடுமென, மார்க்சிஸ்ட் மாநில செயலார் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை சண்டைக்கு பின்னால் பாஜ உள்ளது. அதிமுகவை பாஜவிடம் அடமானம் வைத்து விட்டார்கள்.

அண்ணாமலை பேசுவதுதான் இபிஎஸ்சின் கொள்கை; ஓபிஎஸ்க்கு கோட்பாடு. மதுரை மடாதிபதி, இஸ்லாமியர்கள் தேச துரோகி என பேசுகிறார். இதற்கு அண்ணாமலை, அதிமுக தரப்பில் வக்காலத்து வாங்குகின்றனர். பாஜவுடன் கூட்டணி வைத்த அதிமுக, தானாக காணாமல் போய்விடும். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றனர். இந்த நெருக்கடியான கால கட்டத்தில்தான் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நேரத்தில் 2வது அலை கொரோனா உச்சகட்டத்தில் இருந்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறையில் தமிழகம் தத்தளித்து கொண்டிருந்தது. ஓராண்டு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி, சில காரியங்கள் செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. குறிப்பாக, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பஸ் பயணம், ரூ.4 ஆயிரம் கோடிக்கான நகைக்கடன் தள்ளுபடி, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் திமுக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.

100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களில் செயல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. 1,500 ஜவுளி ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. சிறு குறு தொழிலை அழித்து கார்ப்பரேட் கம்பெனியிடம் ஒப்படைப்பதுதான் மோடி அரசின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: