சமயபுரம், உறையூர் கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் நாளை (6ம் தேதி) நடக்கிறது. இதற்காக காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு நேற்று முன்தினம் மாலை பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் கோலாகலமாக துவங்கியது.

நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி ஸங்க்ரஹணம், தீர்த்த ஸங்க்ரஹணம், தீபாராதனை பூஜை நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பலங்காரம், கடஸ்தாபனம் முதற்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலையும் பூஜைகள் தொடர்ந்து நடந்தது. சமயபுரம் கோயில் கோபுர கும்பாபிஷேகம் நாளை காலை 6.45 மணி முதல் 7.25 மணிக்குள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோயில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது. இதேபோல் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நாளை நடக்கிறது.

Related Stories: