தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஜூலை 8,9 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில்  5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாற்றில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, வால்பாறையில் 6 செ.மீ , மேல்பாவனி, சோலையாறு, சிங்கோனாவில் தலா 5 செ.மீ மழை பொழிந்துள்ளது. நாளை முதல் ஜூலை 9 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கரையோரம், வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி, லட்சத்தீவு, கர்நாடகா, கேரள கரை, வடக்கு ஆந்திரா, மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது என தெரிவித்தது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: