சாலையின் நடுவிலுள்ள இடையூறு மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

சாயல்குடி : கடலாடியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால், மாற்று இடத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளம் செல்ல பிரதான சாலை உள்ளது. இதனை கடலாடி, மேலக்கடலாடி, எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, பிள்ளையார்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நீதிமன்றம், கோயில்கள் இச்சாலை அருகே அமைந்துள்ளதால் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.

இந்நிலையில் பத்திரகாளியம்மன் கோயில் முன்புறம் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. கடந்த 2019ல் பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்டது.

இந்த மின்கம்பத்தால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 4 வருடங்களாக மாற்று பாதையில் சென்று வருவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கடலாடி மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: