சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி-போலீசார் விசாரணை

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் உள்பட 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். சேலம் மாவட்டம் இடங்கணசாலை சாத்தாம்பாளையத்தை சேர்ந்த சொர்ணம் (70) என்பவர் மகள் மேகனாவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க  முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சொர்ணம், மேனகாவை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சாத்தாம்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் சொர்ணம் மாதம் ₹5 ஆயிரம் என சீட்டு போட்டு வந்துள்ளார். இதுவரை அவர் ₹4 லட்சம் கொடுத்துள்ளார். இதனிடையே சீட்டு பணத்தை சொர்ணம் கேட்க சென்றுள்ளார். அப்போது பணத்தை அவர் கொடுக்கவில்லை என்றும்,  இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சொர்ணம் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதேபோல் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வி (52) என்பவர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அதேபகுதியை சேர்ந்த தம்பதியிடம் செல்வியின் மகன் குமார், ரிக் வண்டி வாங்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஆத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி அதன் மூலம் ரிக் வண்டி வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை நம்பி குமார் வீட்டு பத்திரத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வீட்டு பத்திரத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் வீட்டு பத்திரத்தை மீட்டு தரக்கோரி செல்வி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது.

சேலம் மாவட்டம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (51). இவரும் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சாந்தி மல்லமூப்பட்டி பகுதியில் 900 சதுரடி நிலத்தை வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டுள்ளார். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்ககோரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற 4 பெண்களையும் போலீசார் டவுன் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: