சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இன்று முதல் தியேட்டர், வணிக வளாகம், மால்கள் மற்றும் மார்க்கெட்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.