இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை: தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 கூடியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக ஒன்றிய அரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இந்த விலை உயர்வு அதிகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு விளக்கமளித்தது. இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து தங்கத்தின் விலை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரி உயர்வு அறிவித்த அன்றே, அதாவது 1ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.107 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,785க்கும், சவரனுக்கு ரூ.856 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,280க்கும் விற்கப்பட்டது.

2ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,798க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,384க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது.

Related Stories: