12 இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் விடுவிக்க வலியுறுத்தி   ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:  தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 3.7.2022 அன்று  (நேற்று முன்தினம்) கைது செய்யப்பட்டுள்ளனர். 15.6.2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு,  மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: