சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் சிறையில் உள்ள 4 பேரிடம் மருத்துவக்குழு விசாரணை

ஈரோடு: சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த மாலதி, சிறுமியின் வயதை மாற்றி போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த சூரம்பட்டி ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மருத்துவமனைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் ஈரோடு, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் ஈரோடு அருகே அரசு காப்பகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். போலீசாரிடமும் வழக்கு விசாரணை நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி, கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குநரக அதிகாரிகள் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்று நீதிபதி மாலதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு ஈரோடு வந்தனர். நேற்று காலை ஈரோடு கிளை சிறைக்கு சென்ற, போலி ஆதார் ஆவணம் தயாரித்த ஜானிடம் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் கோபி மாவட்ட சிறையில் சிறுமியின் தந்தையிடமும், தொடர்ந்து கோவை சிறையில் சிறுமியின் தாய், கருமுட்டை விற்பனை புரோக்கர் மாலதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். எத்தனை முறை சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது? பாலியல் ரீதியான தொல்லைகள், சிறுமி என்று தெரிந்தே மருத்துவமனை நிர்வாகங்கள் கருமுட்டை எடுக்க முன்வந்தார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: