குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு

குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் அதனுடன் சேர்ந்து ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோதண்டம் என்பவர் காவலாளியாக வேலை செய்கிறார். வழக்கம்போல், நேற்று காலை கோதண்டம் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த குப்பை தொட்டியில் கைப்பை ஒன்று இருந்தது. அதனை பிரித்து பார்த்தார். அப்போது, அதில் தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். நகைப்பையை மீட்டனர்.  ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகை பையை போட்டுவிட்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் யார்? என போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக போலீசாருக்கு புகார் கொடுத்திருந்தார். பின்னர், அவர் வீட்டிற்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளில் பதிவான பெண்ணின் உருவத்தை அவரது பெற்றோரிடம் காண்பித்தபோது, அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு சென்றது குறித்து போலீசார் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.  

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது, வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து, குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகைப்பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார், வங்கி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories: