ஷிம்லா: இமாச்சலில் குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப்பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள ஷைன்ஷெர் பகுதியில் இருந்து சைன்ஜ் நோக்கி தனியார் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் பயணித்தனர். ஜங்கலா கிராமத்தின் அருகே கொண்டை ஊசி வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. முதலில் 16 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 13 பேர் பலியானதாகவும், 2 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.