தென் மாவட்ட ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ விற்பனையில் பனை பொருட்களுக்கு முதலிடம்

மதுரை: ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தில், கடந்த 10 நாட்களில் விற்பனையான பொருட்கள் பட்டியலில், பனைப் பொருட்கள் மிகுந்த வரவேற்புடன் முதலிடம் பிடித்துள்ளது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஜூன் 23 முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விற்பனை ஜூலை 7 வரை நடைபெற இருக்கிறது.ஜூலை 2 வரை கடந்த 10 நாட்களில் திருச்செந்தூர், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் ரூ.2,81,960 மதிப்புள்ள பனைப் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. மதுரையில் ரூ.1,84,660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகியுள்ளன. இந்த 8 ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாட்களில் ரூ.6,91,473 மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகி உள்ளன. இதில் பனை பொருட்கள் முதல் இடம் பிடித்துள்ளது.

மீண்டும் ஜூலை 8 முதல் 15 நாட்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழநி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவில்லிபுத்தூர், கொடைக்கானல் ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு,

பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், கைத்தறி சேலை, ஆயத்த ஆடை, பேப்பர் பொருட்கள், விவசாய விளைபொருட்கள், மூங்கில் இருக்கைகள், மண்பாண்ட பொருட்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணெய், மர விளையாட்டு பொருட்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருட்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருட்களை விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய - மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவுபெற்ற சுய உதவிக்குழுக்கள், பதிவுபெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு அளிக்க தகுதி பெற்றவராவர். விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை ஜூலை 5 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அன்று மாலை 3.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். இந்தத் தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: