திருவள்ளூர்- தேவந்தவாக்கம் இடையே மாலையில் அரசு பஸ் இயக்கவேண்டும்; எம்பியிடம் பொதுமக்கள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சி.காளிதாஸ், கே.ஜெயக்குமார் எம்பியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு; திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தேவந்தவாக்கம் மற்றும் சோமதேவன்பட்டு ஆகிய 2 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். தேவந்தவாக்கம் கிராமத்துக்கு அரசு பேருந்து எண் டி.14 காலை நேரத்தில் மட்டும் வந்து செல்கிறது.மாலை நேரத்தில் அந்த பஸ் இயக்கப்படுவதில்லை.

இந்த கிராமங்களில் இருந்து சென்னை, பெரும்புதூர் பகுதிக்கு திருவள்ளூர் வழியாக ஏராளமானோர் தினமும் வேலைக்கும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு வர வேண்டுமானால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மெய்யூரில்தான் பேருந்து மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

மெய்யூரில் இருந்து 3 கி.மீட்டர் தூரம் நடந்து தேவந்தவாக்கம் வரை செல்லும் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே திருவள்ளூரில் இருந்து தேவந்தவாக்கம் வரை டி 14 என்ற அரசு பேருந்தை மாலை நேரத்திலும் இயக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

“போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஜெயக்குமார் எம்பி உறுதி அளித்துள்ளார்.

Related Stories: