சோழிங்கநல்லூர் ஓஎம்ஆரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு; தம்பதி உயிர் தப்பினர்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் நேற்றிரவு சாலையில் ஓடிய சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வயதான தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, கண்டிகை பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை (65). இவர் நேற்று மாலை தனது மனைவியுடன் ஒரு சொகுசு காரில் சென்னை அடையாறுக்கு வந்தார். பல்வேறு பணிகளை முடித்துவிட்டு, இரவு ஓஎம்ஆர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

காரை, மாதவன் பிள்ளை ஓட்டினார். சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலை பள்ளி எதிரே ஓஎம்ஆர் சாலையில் சென்றபோது, காரின் முன்பகுதியில் குபுகுபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் இன்ஜின் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவன் பிள்ளை, உடனடியாக காரை நிறுத்தினார். அவரும் அவரது மனைவியும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

தகவலறிந்து மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: