நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் :அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு; ஓபிஎஸ் - இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:வரும் 11ம்தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓபிஎஸ்-இபிஎஸ் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும். தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும். நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம், நீதிபதி உத்தரவை மீறி பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேனை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர் என்றார். அப்போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அவைத் தலைவரை தேர்வு செய்துள்ளனர். அந்த அவைத் தலைவரும் 11ம்தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்றும் கூறியுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

 அப்போது நீதிபதிகள், நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டது ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான வழக்கில் தான் உத்தரவிட்டோம். வரும் 11ம்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியிடம் தான் நீங்கள் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்., தமிழ் மகன் உசேன், ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் 7ம்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: