நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி; தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள அருவிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பாய்ந்து வந்து ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. குற்றாலத்தில் மட்டும் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகா தேவி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என ஒன்பது அருவிகள் இருக்கின்றன. வழக்கமாக ஜூலை மாதத்தில் குற்றால சீசன் தொடங்கும்.

ஆனால் இதுவரை சீசன் தொடங்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் குற்றாலத்திற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சீசன் தொடங்காத நிலையில் முதல்முறை அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கல், மண், மரப்பட்டைகள் அடித்து வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்றைய தினம் வார விடுமுறை என்பதால் ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு வந்த மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து சென்றனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் 2வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: