பொதுக்குழுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தாக்கல் செய்த மனு ஜூலை 6ல் விசாரணை!!

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்தலாம். ஆனால், தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும் தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை’’ என உத்தரவிட்டு பொதுக்குழுவுக்கு தடைகோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உடனடியாக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நள்ளிரவு வரையில் விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், ‘‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’’ என தெரிவித்தனர்.

தொடர்ந்து, கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதனால், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி உச்ச்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பினர் முறையீடு செய்தனர். எடப்பாடி கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை வரும் 6-ம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளது. தலைமை நீதிபதியின் உத்தரவை பெற்று வழக்கை விசாரிப்பதாக இந்திரா பேனர்ஜி அமர்வு தெரிவித்துள்ளது. இதனிடையே அதிமுக வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என கேவியட் தரப்பினர் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: