மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரிப்பு; 27 பேர் ராணுவத்தினர்..!!

நோனி: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 42 பேரில் 27 பேர் ராணுவத்தினர் என தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரயில்வே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் சிக்கினர். இதுகுறித்த தகவலின்பேரில் ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 27 பேர் ராணுவ வீரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். எனினும் அப்பகுதியில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 13 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, நோனி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் ஆற்றின் அருகே செல்லாமல் பார்த்து கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், நோனி துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: