சென்னை: கட்சியை விட்டு விலகும்படி எடப்பாடியை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு முடிந்தவுடன் இரு அணியினரும் தனித்தனியாக செயல்பட தொடங்கி தொடர்ந்து இரு அணியினரும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பேட்டி கொடுக்கவும் வசை பாடியும் வந்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான அதிமுக இளைஞரணி வடசென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொளத்தூர் அகரம் சந்திப்பு பகுதியில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் `இபிஎஸ் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். ஜெயலலிதா நடத்தி வந்த கட்சியில் அவருக்கு இடம் இல்லை. அவரது துரோக மனப்பான்மையை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்’ என கண்டன கோஷங்களை எழுப்பினர்.