சென்னை: திருவள்ளூர் அடுத்த காக்களூர், அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (எ) சேட்டு (52). இவருக்கு மனைவி மஞ்சுளா (48), மகள் ஜெயஸ்ரீ (23), மகன் விக்னேஷ் (21) ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே சந்திரனுக்கு அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 ஆண்டுகளாக தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தனது தாய் மஞ்சுளாவுடன் ஜெயஸ்ரீ வசித்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு மஞ்சுளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை நீதிமன்றத்தில் மஞ்சுளாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தனது தாய் மஞ்சுளாவுக்கு ஆதரவாக ஜெயஸ்ரீயும் ஆஜரானார். அதை பார்த்ததும் சந்திரன் ஆத்திரத்தில் இருவரையும் திட்டியபடி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மஞ்சுளா, ஜெயஸ்ரீ, அவரது அத்தை லட்சுமி ஆகிய 3 பேரும் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்திரன் மனைவி மற்றும் மகளை தரக்குறைவாக திட்டியதுடன், `என்மீதே வழக்கு போடுகிறீர்களா, தொலைச்சுடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.