தாம்பரம்: குடிபோதையில் நண்பரை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலன் (57). இவர் அதேபகுதியில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் வினோத்குமார் (32). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார் அருகில் உள்ள கடைக்கு சென்று காய் வெட்டும் கத்தியை வாங்கி வந்து, கோகிலனை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த கோகிலன் அலறிதுடித்தவாறு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.