டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தக்கூடாது

சென்னை: பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது என்று நடத்துநர், ஓட்டுர்களுக்கு போக்குவரத்து துறை கூறியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து நிர்வாக மேலாண் இயக்குநர், கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்க வரும்போது அவர்களிடம் நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக புகார்கள் வருகின்றன. எனவே, ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ள நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும்.

அதன்படி, பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். அதைவிடுத்து பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக்கூடாது. நடத்துநர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ள கூடாது.

மேலும், வயது முதிர்ந்த பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தை பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். மேலும், பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துனரின் சமிக்ஞை கிடைத்தப்பின் கதவுகளை மூடிய நிலையில் தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர் இடது பக்கவாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் யாரேனும் ஏறுகிறார்களா அல்லது இறங்குகிறார்களா என்பதை கவனமாக பார்த்து, அதன் பிறகு தான் பேருந்தை இயக்க வேண்டும்.

அதிலும், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும்போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை  ஏற்றி செல்ல வேண்டும். கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. மேலும், பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகள் இறங்க தயார்ப்படுத்தவும் வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: