44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் ஆய்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து விசாரித்தார்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை  செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் மற்றும் பெடரேஷன் சேர்ந்தவர்களுடன் நேரில்  சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 1ம் தேதி சென்னை, காமராஜர் சாலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், தலைமை செயலாளர் இறையன்பு நேற்று மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகளின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022  போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பஸ்சிலேயே பயணம் மேற்கொண்டு, இப்போட்டியில் பங்குபெற உள்ள  போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள் பயணிக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தார். மேலும், மின்வாரிய பணிகள், சுகாதார பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிட பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்

கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினையும், பூஞ்சேரி பகுதியில் 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்கத்தினையும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், மாமல்லபுரம் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை பார்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.  மாமல்லபுரம், பேருந்து நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிக்கான விளம்பர பணிகளை பார்வையிட்டார். மேலும், மாமல்லபுரம், கடற்கரை கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளையும், குளம் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வரவேற்று அழைத்து செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள்,  செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: