அமராவதி: அமராவதியில் மருத்துக் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துதை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர் கொல்லப்பட்டது போன்று, கடந்த மாதம் 21ம் தேதி அமராவதியில் மருந்து கடைக்காரர் உமேஷ் பிரகலாத்ராவ் கோல்கே (54) என்பவர் இதே பாணியில் கொலை செய்யப்பட்டார். இவரும் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்தை பதிவு செய்தவர்தான். 2 கொலைகளும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதால், கோல்கோ கொலை வழக்கையும் என்ஐஏ.விடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே டாக்டர் பகதூர் கான் (44) என்பவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான இர்பான் கானும் (32) நேற்று சிக்கினார். இந்த கொலையில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், விசாரணையை என்ஐஏ தீவிரப்படுத்தி இருக்கிறது.