முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை: சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நாமக்கல் மாநாட்டில் அறிவுரை

நாமக்கல்: அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்று நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேலம் சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டுக்கு தலைமை வகித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் இங்கு வந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றிக்கு பின்னால், உங்களின் உழைப்பும், தியாகமும், போராட்டமும், திறமையும் இருக்கிறது. நீங்கள் ஏற்றிருப்பது சாதாரண பொறுப்பல்ல. இது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விட உயர்ந்த பொறுப்பா? என்று நினைக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்பு என்பது மக்கள் பணிக்கான உயிர்நாடி. அந்த பணியின் மகத்துவம் அறிந்து பணியாற்ற வேண்டும். தந்தை பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்துதான் சமூக நீதி தலைவரானார். மூதறிஞர் ராஜாஜி சேலம் நகராட்சி தலைவராக இருந்துதான் தமிழக முதல்வரானார். கல்விக் கண் திறந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி தலைவராக இருந்துதான் அரசியல் பயணத்தை தொடங்கினார். பேரறிஞர் அண்ணா கூட சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்தான். இன்று முதல்வராக உங்கள் முன்பு நிற்கும் நானும் சென்னை மேயராக பணியாற்றிவன்தான்.

எனவே, உள்ளாட்சி பொறுப்புகளை நீங்கள் எளிதாக எடை போடக்கூடாது. மக்கள் பணி என்பது தான் நமது முதல் பணியாக இருக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்ற முடியும், அதற்கான பயிற்சி முகாம் தான் இங்கு நடக்கிறது. மிகச்சிறிய வயதில் கலைஞரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தேன். ஆனால், கலைஞரோ என்னை படி.. படி.. என்றார். எனக்கு அரசியல் படிப்பும், மக்கள் பணியுமே கனவாக இருந்தது. அதனால்தான் பெரியார், அண்ணா, கலைஞர் வழியை பின்பற்றி மக்கள் பணியை தேர்ந்தெடுத்தேன். ஒரு கொள்கைக்காக உழைக்க களமிறங்கினேன். அப்படி உழைத்த எனக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. சிறைவாசம்தான் கிடைத்தது.

அதற்கு பின்பு புடம் போட்ட தங்கமாக வெளியே வந்தேன். 1977ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த எனக்கு 1989ம் ஆண்டுதான் சட்டமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் நுழைய 12 ஆண்டுகள் ஆனது. பொறுப்புகள் என்பது உடனடியாக கிடைக்காது. அதற்காக காத்திருக்க வேண்டும். அதுவும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். எந்த வாய்ப்பும் பெறாமல் கழகத்திற்கு உழைத்து மறைந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், அதற்கு மாறாக உங்களுக்கு பொறுப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதும், தக்க வைத்து கொள்வதும்தான் முக்கியம்.

அதற்கு உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாகத்தால் தவிக்கும் மக்களுக்கும், உதவி கேட்கும் விவசாயிகளுக்கும், நோயால் வாடும் ஏழைகளுக்கும் உங்கள் கையெழுத்தால் தீர்வு கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும்  தீர்வு தான், உங்கள் கையெழுத்தின் மிகப்பெரிய சக்தி. இந்த சக்தி உங்கள் கையில் இருக்கிறது. அதை மக்களுக்காக பயன்படுத்துங்கள். இந்த வகையில் நான் போட்ட கையெழுத்து பல லட்சம் மக்களின் துயரங்களை தீர்த்திருக்கிறது. இந்த சக்தியை கொடுத்தவர்கள் மக்கள், முதல்வர் என்ற சக்தியை மக்கள் கொடுத்ததால்தான் இந்த சாதனைகளை செய்ய முடிகிறது.

போகும் இடமெல்லாம் அவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். இத்தகைய பாராட்டை நீங்களும் பெற வேண்டும். 50 ஆண்டுகளாக மக்களை நான் சந்தித்து வருவதால், அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியும். மகிழ்ச்சி, மலர்ச்சியோடு அவர்கள் முகம் இருந்தால் தான் பாசிட்டிவாக இருக்கும். அந்த உணர்வை நீங்களும் உருவாக்க வேண்டும். உங்களை தேடி வரும் மக்களுக்கு தவறாமல் பணியாற்ற வேண்டும். மாநகராட்சி மேயர் முதல் வார்டு கவுன்சிலர் வரை யாரும் எந்த தவறும் செய்யக் கூடாது. அப்படி பணியாற்றுவதுதான் நமது கடமை என்பதை உணர்த்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். பெண்கள் எதற்கும், யாருக்கும் பயப்படாமல் பணியாற்ற வேண்டும்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, சட்டப்படி - விதிமுறைப்படி - நியாயத்தின்படி - மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சிரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும். நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக ஆகிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். ஒழுங்கீனமும் - முறைகேடும் தலைதூக்குமானால், நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை - உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

50 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலன் இது. இதற்கு பின்னால் கோடிக்கணக்கான தொண்டர்களின்  உழைப்பு உள்ளது.

என்னை நம்பி அவர்கள், கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் உருவாக்கக் கூடாது என்று தாழ்ந்து பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று அனைவரும் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி பொறுப்பில் உங்களிடையே ஒற்றுமை வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேயரும், துணை மேயரும் பேசுவதில்லை. பஞ்சாயத்துகளில் தினமும் பஞ்சாயத்துகள் என்ற செய்திகள் எனது செவிக்கு வருகிறது. இதற்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. ஒற்றுமையுடன் இருந்து ஊருக்கு உழைக்க வேண்டும்.

இங்கு நடப்பது நகர்ப்புற உள்ளாட்சி மாநாடாக இருந்தாலும் 5 தலைப்புகளில் இங்கே கருத்தரங்கம் நடந்தது. சமூக நீதி, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமத்துவம் என்பது தான் திராவிட இயக்க கோட்பாடு. அந்த இயக்கம் நடத்துவது தான் திராவிட மாடல் ஆட்சி. அதை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திமுகவில் அங்கம் வகிக்கும் நீங்கள் அரசின் சாதனைகளோடு இதையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாலம் அமைப்பதோடு மட்டுமின்றி சகோதர பாலமும், சமத்துவ பாலமும் அமைக்க பாடுபட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியால் தான் அனைவரும் அனைத்தையும் அடைய முடியும்.

எனவே, அனைத்து சமூகத்தையும் இணைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும். பெரியார் சமூக நீதி நாள், அம்பேத்கர் சமத்துவ உறுதிமொழி ஏற்பு என்று அனைத்தையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். பதவியை விட பொறுப்பே நமக்கு முக்கியம் என்பதை உணரவேண்டும். தந்தை பெரியார் நினைத்திருந்தால் மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்திருக்கலாம். அண்ணா நினைத்திருந்தால் கல்வி சீமானாக வலம் வந்திருக்கலாம். கலைஞர் நினைத்திருந்தால் திரைத்துறையில் முதலிடத்தை பிடித்திருக்கலாம். ஆனால், இவர்கள் அனைவரும் தனித்திறன் மறந்து தமிழ் சமுதாயத்திற்காக உழைத்தவர்கள்.

அதன் விளைவாக உருவானதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கத்திற்கு பதவியை விட கொள்கையே முக்கியம். பதவி என்பது தோளில் போட்ட துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டிய வேட்டி என்றார் பேரறிஞர் அண்ணா. இதை மையமாகக் கொண்டு நாம் நடைபோடுகிறோம். நாம் பயணிப்பது இயக்கம் அல்ல இதயம். அதனால்தான் இயங்கி கொண்டே இருக்கிறது. அதை அனைத்து சமுதாய மேம்பாட்டுக்காவும் நீங்கள் பயன்படுத்தி பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முடிவில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறினார்.

* 10,000 மஞ்சப்பை விநியோகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டுக்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வரின் அறிவிப்பு படி மஞ்சப்பை வழங்கப்பட்டது. அதில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கையேடு, அவர்களின் அதிகாரங்கள், அரசின் விதிமுறைகள் குறித்த புத்தகம், முககவசம், குடிநீர்பாட்டில், குளிர்பானம், பிஸ்கெட் பாக்கெட் ஆகியவை இருந்தது. மாநாட்டில் பங்கேற்ற 10,000 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த பை விநியோகம் செய்யப்பட்டது.

* ‘நாமக்கல்லை திமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளார்’: ராஜேஸ்குமார் எம்.பிக்கு பாராட்டு

மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இந்த மாநாட்டை அமைச்சர் நேருவும், அருமை தம்பி ராஜேஸ்குமாரும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தான் மட்டும் வெற்றி பெறாமல் மற்றவர்களும் வெற்றி பெற  வேண்டும் என்று நினைப்பவர் நேரு. அதனால்தான் அவர் அனைவரையும் அரவணைத்து உழைக்கிறார். அந்த வகையில் ராஜேஸ்குமாரை இணைத்து வெற்றி பெற வைத்திருக்கிறார். நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் வெற்றி பெற்றார் என்பதை விட முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை மனமாற வாழ்த்துகிறேன். நேற்று கரூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்கள் கடலை பார்த்தேன். அதன்பிறகு நாமக்கல்லில் 13 கி.மீ மக்கள் கடலில் நீந்தி வந்தேன். இது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு அல்ல. திமுகவின் மாநில மாநாடு போல் உள்ளது. நாமக்கல்லை திமுகவின் கோட்டையாக ராஜேஸ்குமார் மாற்றியுள்ளார். இளமையான மாவட்ட செயலாளராக  இருந்தாலும், தானும் தேர்ந்த மாவட்ட செயலாளர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கும், அவருக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்’ என்றார்.

Related Stories: