செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் கல்வி உதவி தொகையுடன் மாணவர் சேர்க்கை: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுத்துறையால் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி காஞ்சிபுரம் சதாவரம் கோட்டை காவல் கிராமம் (மாவட்ட அரசு இசைப் பள்ளி அருகில்) நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கல்வி உதவி தொகையுடன் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் முன்பருவப்பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். 3 வயது முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களோடு பேச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்தனி திறன்களை மேம்படுத்த கணினி வழி கற்பித்தல், யோகா, கராத்தே, தியானம், உள் அரங்க விளையாட்டுகளும் கற்பிக்கப்படுகிறது பரந்த விளையாட்டு திடலும் விளையாட்டு சாதனங்களும் கொண்டு மாணவர்களின் உடல் நலம் பேணப்படுகிறது. விடுதியில் 3 வேளையும் சத்தான சமச்சீர் உணவும், சோப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் ஆண்டு கல்வி உதவித்தொகை, இலவச காதொலி கருவி, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, காலணிகள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது.

எனவே, மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் தலைமை ஆசிரியை வள்ளியை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 044-27267322, 9597465717 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: