கூடுவாஞ்சேரி அருகே 9 மாத கர்ப்பிணியான நர்சிங் மாணவி தற்கொலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே 9 மாத கர்ப்பிணியான நர்சிங் மாணவி, காதல் கணவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சஞ்சய் (21). தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர். இவர், சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி, தீப்பாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நர்சிங் மாணவி கோடீஸ்வரி (21) என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி, அம்பேத்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், தற்போது கோடீஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. இதன் காரணமாக சஞ்சய் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இச்சந்தர்ப்பத்தில், வீட்டில் தனியே இருந்த கோடீஸ்வரி மனஉளைச்சலில் திடீரென புடவையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நேற்றிரவு நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே கோடீஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கோடீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: