கார், ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ரூ. 35-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்பனை

நித்திரவிளை: குமரி மாவட்டத்தில் உள்ள பைபர் படகுகளுக்கு தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்ய ஒரு பைபர் படகிற்கு மாதந்தோறும் 240 முதல் 300 லிட்டர் வரை மண்ணெண்ணெயை  தமிழக அரசு மானிய விலையில்(ரூ.35க்கு) வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெயை   வியாபாரிகள் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக லாபத்திற்கு (ரூ 140க்கு)   விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவில் நித்திரவிளை அருகே உள்ள மீனவ கிராமங்களில் இருந்து பயணிகள் ஆட்டோவில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தி  செல்வதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் பூந்தோப்பு காலனி   பகுதியில் வைத்து கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்திய ஒரு  பயணிகள் ஆட்டோவை மடக்கி பிடித்து நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் ஆட்டோவையும் அதில் இருந்த 350  லிட்டர் மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கடை: புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் போலீஸ் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 10 கேன்களில் 350 லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கார் மற்றும் மண்ணெண்ணெயை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது, தூத்தூர் பகுதி ஆன்டனி சேவியர் (41) என்பவர் முள்ளூர்துறை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இது போன்று பார்த்திபபுரத்தில் வைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 5 கேன்களில் 175 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்இருந்தது.

அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த அவுசேப்(31) என்பவர் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த சொப்னா என்பவரிடம் இருந்து மண்ணெண்ணெய் வாங்கி கடத்தி செல்வது தெரிய வந்தது. புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயலாதேவியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: