சுற்றுலா பயணிகளை கவரும்; லிசியாந்திஸிஸ் மலர்கள்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள லிசியாந்திஸிஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் ஆண்டுதோறும் பூங்காவில் முதல் மற்றும் 2ம் சீசன் போது பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இடைபட்ட காலங்களில் மலர்கள் இருக்காது. தற்போது முதல் சீசன் முடிந்த நிலையில், அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்காவில் உள்ள நர்சரிகளில் விதைப்பு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க கண்ணாடி மாளிகையில் பல ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது கண்ணாடி மாளிகையில் பல வகையான மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்ட போதிலும், நுழைவு வாயில் பகுதியில் லிசியாந்திஸிஸ் என்ற வகைகளை கொண்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள் பார்ப்பதற்கு ரோஜா மலர்களை போன்று காட்சியளிக்கிறது.

நான்கு வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த மலர் செடிகள் தற்போது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த மலர்களின் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: