கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலையுடன் இணையும் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை ஆகியவற்றை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் சுப்பிரமணிய நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அதிகாரி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது 2 ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, சங்கத்தின் செயலாளர் கோபி கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம்  வழங்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கோபி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர் ஒரு லட்சத்து 5 ஆயிரம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் பணம் செலுத்தியவுடன் மாற்று இடத்திற்கு அனுப்பப்படுவார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று  கோரினார்.இதையடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கவே கூடாது. பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று இடத்திற்கு பணம் செலுத்தும் வரை நடவடிக்கை எடுக்காமல் 4 ஆண்டுகளாக அரசு காத்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்றிவிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.

Related Stories: