சதம் விளாசினார் ஜடேஜா முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன் குவிப்பு

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் எடுத்திருந்தது. ஒரு கட்டத்தில் 98 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய இந்திய அணியை, பன்ட் - ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி சரிவிலிருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது. பன்ட் 146 ரன் (111 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஜடேஜா (83 ரன்), ஷமி (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷமி 16 ரன், ஜடேஜா 104 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

பும்ரா - சிராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 41 ரன் சேர்க்க, இந்தியா 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது (84.5 ஓவர்). கேப்டன் பும்ரா 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, பாட்ஸ் 2, பிராடு, ஸ்டோக்ஸ், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, பும்ரா வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. மழை காரணமாக ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட நிலையில், இங்கிலாந்து 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தது. அலெக்ஸ் லீஸ் 6, ஸாக் கிராவ்லி 9, ஆலிவர் போப் 10 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினர். இந்த நிலையில், ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர்.

Related Stories: