தமிழர்களை நினைத்து பூரிப்படைகிறேன்: பாஜ கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பேச்சு

சென்னை: தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்று பாஜ கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கூறினார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். அவர் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்துக்கு வந்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். செம்மொழி, செழுமைமிக்க கலாச்சாரம், பாரம்பரியத்தின் நிலமாக விளங்குகிறது. திருவள்ளுவருக்கு எனது மரியாதை செலுத்துகிறேன். மாநிலத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை செலுத்துகிறேன்.

ராஜகோபாலாச்சாரி, காமராஜர், எம்.ஜி.ஆர்., புகழ்பெற்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ஜெயலலிதா, புகழ்பெற்ற சுந்தர் பிச்சை, தொழிலதிபர் சிவ் நாடார், இந்திராணி, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட புகழ்பெற்றவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. பாண்டியன், சேரன், சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் நாடு விடுதலை பெறுவதற்கு வேலூர் கலகம் உள்பட பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில், தமிழக வீரர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

தமிழகம் கலை, இலக்கியம், இசை, நடனம் உள்ளிட்ட துறையில் முத்திரை பதித்தது. மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட பல இடங்கள் தமிழர்களின் கட்டிட கலைக்கு இன்றளவும் சான்றாக இருக்கின்றன. தமிழகம் சிறப்பான மாநிலம். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். தமிழகம் ஒளிமயமான கடந்த காலத்தை கொண்டுள்ளது. தமிழகம் விவசாயத்தை சார்ந்து இருக்கிறது. தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன். பழங்குடியின குக்கிராமத்தை சேர்ந்தவள். நான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவள். சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் நான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: