சுகுணா, சத்யா, சரண்யா என ஊருக்கு ஒரு பெயரை மாற்றி பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துகளை சுருட்டிய கில்லாடி பெண்: முதல் கணவருடன் ஓட்டம்

சென்னை: பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு ஓடிய மோசடி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜூ நகர் 11வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65). இவரது மகன் ஹரி சோழிங்கநல்லூரில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவன இன்ஜினியர். விவாகரத்தான, இவர் 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, மேட்ரிமோனியனில் வெப்சைட்டிலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை தேர்வு செய்தார். பின்னர் இருவருக்கும் இது2வது திருமணம் என்பதால் பெற்றோர் சம்மதத்துடன், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அக்டோபர் 25ம் தேதி திருநின்றவூரில் திருமணம் நடந்தது.  திருமணம் முடிந்து சில மாதங்களில், தனது கணவர் ஹரியிடம், ‘இனிமேல் உங்கள் மாத சம்பளத்தை என்னிடம்தான் தர வேண்டும் என்று கேட்டாராம்.

மேலும், ‘உங்களது சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது’ என்றும் கேட்டுள்ளார். அன்பு மனைவிதானே என்று நினைத்து தனது சொத்து மற்றும் சம்பளத்தை மனைவி சத்யாவுடன் கொடுத்துள்ளார் ஹரி. நாட்கள் செல்ல செல்ல, சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் ‘சொத்துக்களை என் பெயரில் எழுதி வை’ என்று ஹரியை, சத்யா டார்ச்சர் செய்துள்ளார். உன் பெயரில் சொத்து எழுதி வைக்க பதிவுத்துறை அலுவலகத்துக்கு, ஆதார் கார்டு, கல்விச்சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகிறது. அதை கொடு சொத்தை மாற்றி கொடுக்கிறேன் என்று சத்யாவிடம், ஹரி கேட்டாராம்.

ஆனால், அதற்க சத்யா அந்த ஆவணங்களை தர மறுத்துவிட்டார். சந்தேகமடைந்த ஹரி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சத்யாவை தேடினர். இதையறிந்த சத்யா ஆந்திராவில் மறைந்து இருந்தார். அவரை போலீசார் கடந்த 28ம் தேதி சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போதுதான், சத்யா ஏற்கனவே ரவி என்பவரை திருமணம் செய்ததும் 2 மகள்கள் இருப்பதும், அந்த மகள்களுக்கும் திருமணமாகிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரவி மற்றும் அவரது மகள்களை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், ரூ.10 லட்சம், 10 பவுன் நகைகள் பெற்று கொண்டது தெரிந்தது.

மேலும் சுகுணா, சத்யா, சரண்யா என பெயரை மாற்றி மாற்றி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் மேட்ரிமோனியலில் விவகாரத்தானவர் என்று வெளியிடுவதை வழக்கமா கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தான் முதல் கணவர் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகையை பறித்துவிட்டு முதல் கணவர் என்று கூறப்படும் சுப்பிரமணி வீட்டுக்கு சென்றுவிடுவாராம். இந்த மோசடி ஐடியா அனைத்தும் சுப்பிரமணியின் ஏற்பாட்டில் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இந்நிலையில் ஹரியின்  புகாரின் அடிப்படையில் செய்ததாக போலீசார் சத்யாவை கைது செய்தனர்.

Related Stories: