பழநி திருக்கோயிலில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இரண்டாம் நாளாக சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மானியக்கோரிக்கையில் 2021- 2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் முதலில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளிலும், இந்த ஆண்டு 165 அறிவிப்புகளிலும் மொத்தமாக 4400 பணிகள் குறித்து இரண்டு நாட்களாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பணிகள் துவக்குவது குறித்தும், ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகள் குறித்தும் ஆய்வினை மேற்கொண்டோம்.

அந்த வகையில் 2021-2021 அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் சுமார் 1800 பணிகளில் 40 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுற்று இருக்கின்றன. 50 சதவீதம் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 10 சதவீதப் பணிகள் துவங்கப்பட இருப்பதை கலந்தாய்வில் உறுதி செய்துள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்ட 2600 பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

அதில் 75 சதவீதம் அளவிற்கு அரசானைகள் பெறப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. பழநி திருக்கோயில்களில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி குறித்தும், அதேபோல் ஏற்கனவே துவங்கப்பட்ட அதிகமாக பக்தர்கள் வருகின்ற 10 திருக்கோயில்களுக்கு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 மருத்துவமனைகள் தொடங்குவது குறித்தும், நாள் முழுவதும் பிரசாதம் 5 திருக்கோயில்களிலே அறிவிக்கப்பட்டது.

உடனடியாக இத்திட்டத்தை துவக்குவது குறித்தும், நடைபெற்று கொண்டிருக்கின்ற அன்னதானத் திட்டத்தில் புதிதாக 10 திருக்கோயில்களில் தொடங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு 2 திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டத்தில் இருந்ததை தொடர்ந்து கூடுதலாக 3 திருக்கோயில்கள் என ஐந்து திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இத்திட்டமானது தற்போது  விரிவுபடுத்தப்பட்டு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நெல்லையப்பர் திருக்கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் என அறிவிக்கப்பட்டிருந்தோம் நாளை இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. 13 திருக்கோயில்களுக்கு பேட்டரி கார்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்களிலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும், தொடங்கப்பட்டு இருக்கின்றது. மீதமுள்ள 11 திருக்கோயில்களில் அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பின்படி துவங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 திருக்கோயில்கள் ரூ.1000 கோடி ல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் பணிகள் குறித்தும், 1000 ஆண்டு பழமையான திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ஒப்புதல் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்தும், அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில்  ஆலோசனை செய்து அறிவுரைகளை வழங்கி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

    

இந்த சீராய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: