6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, காஞ்சிபுரம் & செங்கல்பட்டு மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில், பொது செயலாளர் பத்ரி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயவேலு வரவேற்று பேசினார். போராட்டத்தில் காது கேளாதோருக்கு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் நடத்திட வேண்டும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காது கேளாதவருக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுத்திட வேண்டும்.  அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில், சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். கல்வி நிறுவனங்களிலும் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சைகைகள் மூலம் கோஷங்களை எழுப்பி காது கேளாதோர் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: