பூந்தமல்லி: முகக்கவசத்துடன் திருடிய அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்ரித்திருந்த 2 பேரை பிடித்தனர்.
விசாரணையில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (எ) மாட்டு ரமேஷ்(45) மற்றும் உதயா(40) என தெரியவந்தது. சகோதரர்களான இருவரும் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரும் போலீசில் சிக்காமல் இருக்க முகக்கவசம் அணிந்து சாதாரண மக்களை போல பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளதும், மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக இவர்கள் நம்பர் பிளேட் இல்லாத ஆட்டோவில் வந்து சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.