மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற; போதை வாலிபர்

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க அனுமதி மறுத்ததால் போதை வாலிபர், போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக 3வது நுழைவு வாயில் முன்பு இன்று காலை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பிளேடால், தனக்கு தானே கழுத்து, கை மற்றும் உடல் முழுவதும் அறுத்து கொண்டார்.

ரத்தம் கொட்டியது. அலறி துடித்தார். இதை பார்த்ததும், போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து, தற்கொலைக்கு முயன்ற வாலிபரை மீட்டனர். பின்னர் வேப்பேரி போலீசார் மூலம் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். இவர், சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ் (எ) ஹானஸ்ட் ராஜ் என்பதும், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், இவரது சகோதரர் விபத்தில் படுகாயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க ராஜ் சென்றுள்ளார். அதிகளவில் கஞ்சா போதையில் இருந்ததால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராஜ், தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பேரி போலீசார், ராஜ் மீது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: