குமரி அருகே சோகம், சென்னை மெக்கானிக் மனைவியுடன் தற்கொலை படுக்கை அறையில் சடலமாக கிடந்தனர்

நாகர்கோவில்: குமரி அருகே சென்னை மெக்கானிக் மனைவியுடன் தற்கொலை கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் ஐசக் (40). இவரது மனைவி சந்தியா (34). ஜான் ஐசக், சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஜான் ஐசக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடும்ப தேவைக்காக தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தோழிகள் மூலம் சந்தியா கடன் வாங்கினார். அந்த வகையில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பல லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கடன் தொகையை உரிய முறையில் திரும்ப செலுத்த முடிய வில்லை. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து சந்தியாவிடம், பணத்தை திரும்ப கேட்க தொடங்கினர். இதனால் கணவன், மனைவிக்கு இடையேயும் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் அழகன்பாறையில் இருந்து சந்தியா வீட்டுக்கு வந்தவர்கள் கடன் தொகையை திருப்பி தருமாறு கேட்டு உள்ளனர். இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக கூறி சென்று உள்ளனர். பின்னர் கோட்டூர்கோணத்தில் உள்ள சந்தியாவின் தாயார் சாந்தி (58) என்பவரிடம் சென்று, சந்தியா கடன் வாங்கி ஏமாற்றியதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக கூறினர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறும் நடந்தது. பின்னர் சாந்தி, தனது சகோதரி மகன் வினுவுக்கு போன் செய்து இந்த தகவலை கூறினார்.

இதையடுத்து வினு, சந்தியாவை போனில் தொடர்பு கொண்டார். பலமுறை போன் செய்தும் சந்தியா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து நேற்று இரவு வினு மற்றும் சாந்தி ஆகியோர் சூரியகோடு வந்தனர். அப்போது சந்தியாவின் வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்க வில்லை. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் திரண்டனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு படுக்கை அறையில் சந்தியா தூக்கில் தொங்கி ெகாண்டிருந்தார். கட்டிலில் ஜான் ஐசக் மயங்கி கிடந்தார். தகவலறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவருமே இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் சந்தியா தூக்கு போட்டும், ஜான் ஐசக் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: