சென்னை: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீதான புகாரை 3 மாதத்திற்குள் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி எம். கோபிநாத் உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடந்த வழக்கில் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பெண் பத்திரிக்கையாளர், முன்னால் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் முஸ்லீம் கிருஸ்தவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அருவருக்க தக்க கருத்துக்களை பரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக தான் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியேவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமினில் மீண்டும் இது போன்ற அவதூறு கருத்துக்களை பேசமாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அனால் அதனை மீதி அவர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துவருவதாக அந்த மனுவில் கூறியுள்ளார். எனவே பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். மேலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் கல்யாணராமன் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.