காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி தேர்வு அறையில் இருந்த மின்விசிறி திடீரென அறுந்துவிழுந்ததால், மாணவி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டித்தெருவை சேர்ந்தவர் தில்ஷாத். இவரது மகள் பாத்திமா. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். கல்லூரியில் நேற்று மாணவிகள் செமஸ்டர் தேர்வு எழுதிகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தேர்வு அறையில் உள்ள மின்விசிறி அறுந்து விழுந்தது. இதனால் பாத்திமாவின் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து தேர்வு எழுதியுள்ளார். சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர், மகளை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். ஸ்கேன் எடுத்து பரிசோதித்த டாக்டர்கள், மாணவியின் தலையில் உள்காயம் இருப்பதாக கூறியுள்ளனர்.
கல்லூரியில் மின்விசிறிகளை சரிவர பராமரிக்காதது, மின்விசிறி விழுந்து மாணவிக்கு காயம் ஏற்பட்ட பின்பும் தேர்வு எழுத அனுமதித்து, காலதாமதமாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது போன்ற சம்பவங்களால் கல்லூரி நிர்வாகத்தை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.